மதுரை: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையில்லா சான்றிதழ் கோரி திருநங்கை தொடர்ந்துள்ள வழக்கில் வணிக வரித் துறை செயலாளர் பதிலாளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் திருநங்கை. பல்வேறு இடர்பாடுகளை கடந்து, பி ஏ படித்து முடித்தேன். கடந்த 2019 ல் குரூப்-I தேர்வில் வெற்றி பெற்றேன். பிஎஸ்டிஎம் ( தமிழ் வழி கல்வி) சலுகை அடிப்படையில் பணி ஒதுக்கீடு பெற்று வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தேன்.
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எனது பிஎஸ்டிஎம் சான்றிதழ் செல்லாது என்று 2024-ல் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து என் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் என்னை பணி இடைநீக்கம் செய்தனர். இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்கு கடந்த 1-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குரூப் 1 தேர்வுக்கு நான் விண்ணப்பிக்க வேண்டும். எனக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டி, வணிக வரி துறையில் விண்ணப்பித்தேன். ஆனால், தடையில்லாச் சான்றிதழை வழங்க மறுக்கின்றனர். எனவே, நான் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க எனக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க வணிக வரி துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், மனு குறித்து வணிக வரித்துறை செயலர் , பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.