சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி -கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 17 மின்சார ரயில்களின் சேவைகள் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு இன்றும் (22-ம் தேதி), நாளை மறுதினமும் (24-ம் தேதி) முற்பகல் 11.35, மதியம் 1.40, பிற்பகல் 3.05 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு அதே நாட்களில் காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு அதே நாட்களில் நண்பகல் 12.40, பிற்பகல் 2.40, 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு அதே நாட்களில் மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன. கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் மதியம் 1, பிற்பகல் 2.30, 3.15, 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்து: செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டிக்கு இன்றும், நாளை மறுதினமும் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. கும்மிடிப்பூண்டி – தாம்பரத்துக்கு அதே நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, அதே நாட்களில், சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து பொன்னேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கும், சூலூர்பேட்டை – கும்மிடிப்பூண்டிக்கும் தலா ஒரு பயணிகள் சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இத்தகவல், சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.