சென்னை: “கொடுங்கையூரில் பயோ மைனிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கு குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது” என்று சென்னை மாநகர மேயர் பிரியா கூறியுள்ளார். முன்னதாக, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய மேயர், அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மற்றும் மலேரியா பணியாளர்களின் சேவையை பாராட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, 400 தூய்மை மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு ரூ.7.41 லட்சத்தில், ஒளிரும் பட்டையுடன் கூடிய தலா 2 சீருடைகள், தொப்பி, கைத்துண்டு, குளியல் துண்டு, டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில், ஒரு பை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் கொண்ட பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் மேயர் ஆர்.பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:“சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் இரவிலும் பணியாற்றக்கூடியவர்கள் என்பதால், பணியின்போது சாலை விபத்துகளில் சிக்காமல் இருக்க, ஒளிரும் பட்டைகளுடன் கூடிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் அறிவுறுத்தல்படி, தாட்கோ திட்டம் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரத்யேக அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூய்மை பணியாளர்கள் பணியின் போது ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்தால் வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் நிதியுதவி, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களும் பயன் பெறுவர். இதற்காக மண்டல வாரியாக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத தூய்மை பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். இன்று மாநகராட்சியின் 5 மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி முழுவதும் உள்ள 11 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கும் விரைவில் நல திட்ட உதவிகள் வழங்கப்படும்.
கொடுங்கையூரில் பயோ மைனிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கு குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து ஹைதராபாத்தில் ஆய்வு செய்திருந்தோம். அத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்கின்றனர். அது தொடர்பான 3 மாத மாசு கண்காணிப்பு தரவுகளை கேட்டிருக்கிறோம். அதில் மாசு இல்லாத பட்சத்தில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும், என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுடன் மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோரும் மதிய உணவருந்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ந.ராமலிங்கம், தலைமை பொறியாளர் (பொது) ராஜேஸ்வரி, தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) கே.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.