விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியதாவது: ஃபெஞ்சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்கொள்ளாததால் விழுப்புரம் நகரமே தண்ணீரில் மிதந்தது.
அதிமுக ஆட்சியில் 2 முறை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக ஆட்சி ரத்து செய்துவிட்டது. ரூ.1,503 கோடியிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் திமுக ஆட்சி ரத்து செய்துவிட்டது.
அறநிலையத் துறை மூலம் 9 கல்லூரிகள் தொடங்கப்படும் என்கின்றனர். கல்லூரிகள் அவசியம்தான். ஆனால், எதிர்காலத்தில் அவற்றின் வளர்ச்சிக்கு நிதி கிடைக்காது. எனவேதான், அறநிலைத் துறை மூலம் கல்லூரிகளைத் தொடங்காமல், அரசு சார்பில் தொடங்குமாறு வலியுறுத்துகிறோம்.
கடலில் பேனா சிலை வைக்க ரூ.80 கோடி, கார் பந்தயம் நடத்த ரூ.42 கோடி நிதி ஒதுக்குகின்றனர். ஆனால், அரசுக் கல்லூரிகள் தொடங்க நிதி இல்லையா? தமிழகத்தில் உள்ள 180 அரசுக் கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. இவற்றில் பயிலும் மாணவர்களின் நிலை என்ன? மின் கட்டணத்தை 52 சதவீதம், வீட்டு வரியை 100 சதவீதமும், கடை வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். விழுப்புரம் நகராட்சி, அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
சிறுபான்மை மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். 2026-ல் அதிமுக மக்களாட்சியை நடத்தும்.
இவ்வாறு பழனிசாமி பேசினார். தொடர்ந்து, விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, விழுப்புரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய பழனிசாமி, நேருஜி சாலையில் ‘ரோடு ஷோ’ சென்று மக்களை சந்தித்தார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.