சென்னை / மதுரை: ‘உளுந்தூர்பேட்டை காவல் துறையின் விளக்க அறிக்கை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஒருபக்கச் சார்புடையதாகக் கருதுகிறோம்’ என்று மதுரை ஆதீனம் மடம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ஆதீனம் மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையை மறுக்கிறோம். அதில் விபத்து தொடர்பாக ஆதீனம் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் உளவுப் பிரிவு அதிகாரிக்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாலையில் உளவுத் துறை டிஎஸ்பி எங்களிடம் பேசி சம்பவம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொண்டார்.
எங்கள் கார் சென்ற சாலை, எந்தவித தடுப்புகளும் இல்லாமல் சீராக இருந்தது. சேலம் – சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தன. அப்படியிருந்தும் வேகமாக வந்த கார் எங்கள் கார் மீது மோதியது. அந்த வாகனத்தில் பதிவு எண் இல்லை. காரில் இரண்டு முஸ்லீம்கள் இருந்தனர். போலீஸாரிடம் தகவல் தெரிவிப்பதாகக் கூறியதைக் கேட்டதும் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.
சம்பவம் நடந்து 26 மணி நேரம் கடந்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. காவல் துறையின் விளக்க அறிக்கையில் எங்களைப் பற்றியும், எங்கள் தரப்பு வாகனம் பற்றியும் முழு விவரங்கள் இருந்தன. ஆனால், எதிர் தரப்பு வாகனம் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றியும், தடுப்புகளைத் தாண்டி மோதியது, அந்த காரில் பதிவு எண் இல்லை என நாங்கள் குற்றம்சாட்டியது குறித்து எதுவும் கூறாதது வருத்தம் அளிக்கிறது.
பின்னர் முபாரக் அலி என்பவரின் புகாரின் பேரில் இரு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக 15 முறை போலீஸாரிடம் தகவல் அளித்தும், போலீஸார் எங்களிடம் பேசி தகவல் சேகரித்த போதிலும் மதுரை ஆதீனம் மீதுதான் முழு தவறும் உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கியது வேதனை அளிக்கிறது.
விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பேர் மட்டுமே சென்றனர். ஆனால், குடும்பத்துடன் பயணம் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், பக்கவாட்டில் வந்து மோதியதை மறைக்கும் வகையில் சீராக இருந்த சாலையில் பயணம் செய்த நாங்கள்தான் விபத்து ஏற்படுத்தியது போல் கூறுவது ஏற்புடையது அல்ல. உளுந்தூர்பேட்டை காவல் துறையின் விளக்க அறிக்கை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஒருபக்கச் சார்புடையதாகக் கருதுகிறோம்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி என்ன? – கடந்த 2-ம் தேதி மதுரையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வழியாக மதுரை ஆதீனம் தனது காரில் உதவியாளர்களுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். சேலம் சாலை ரவுண்டானா பகுதியில், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மற்றொரு காரை குறுக்கிட்டு ஆதீனத்தின் கார் சென்றது. இதில் இரண்டு கார்களுக்கும் லேசான சேதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சமரசமாகி சென்று விட்டனர்.
இந்நிலையில், மறுநாள், சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை உளுந்தூர்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அது சதி அல்ல, விபத்து என போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். அதேநேரம், தன் கார் மீது மோதிய காரில் குல்லா அணிந்து, தாடி வைத்திருந்த ஒரு நபரும் இருந்ததாகக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து அந்த விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை வெளியிட்டது.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி விபத்துக்குள்ளான மற்றொரு காரின் ஓட்டுநர் முபாரக் அலி, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாகவும், அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்ததார்’ என தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து, மதுரை ஆதீனம் சென்ற காரின் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் விபத்து வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.