கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது எல்லை கருப்பராயன் கோயில். இக்கோயில் வளாகத்தில் 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில், 18 சித்தர்களையும் செதுக்கிய சித்தக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இக்கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். மேலும், திரைப்பட நடிகை மீனா, நடன இயக்குநர் கலா உட்பட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத தேசம் பாதுகாப்பாக இருக்கவும், மக்கள் வாழ்வு சிறக்கவும் மற்றும் உலக நாடுகளின் நலனுக்காகவும் இவ்விழா நடத்தப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.