சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளர்ச்சி, கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு குறித்து பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து ஊராட்சிகளிலும் அக். 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம், கிராம பஞ்சாயத்தும், மக்களும் தங்கள் பள்ளிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். இதுதவிர, பள்ளியில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், கிராம பஞ்சாயத்துக் கல்விக் குழு மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். எஸ்எம்சி குழுக்கள் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.