சென்னை: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்தள பாதை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தாத்தாதேசிகர் திருவம்சத்தார் சபை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் ஆகம விதிகளுக்கு முரணாக, கோயிலின் தொன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். கோயிலின் கருவறைக்கும், வெளி பிரகாரத்துக்கும் இடையில் நடைமேம்பாலம், கருவறை செல்லும் புனிதமான ஆறு படிகளுக்கு பதில் சாய்தளம் அமைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இவை, அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் உள்ளது,” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலின் செயல் அறங்காவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கருவறைக்கு செல்லும் ஆறு படிகளும் செங்குத்தாக உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளால் ஏற முடியாத நிலை உள்ளது.தற்காலிகமாக சாய்தள பாதை அமைக்கப்படுகிறது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாகவும், அவசர காலங்களில் பக்தர்கள் எளிதில் வெளியேறவும் நடை மேம்பாலம் கட்டப்படுகிறது.
தேவையான அனைத்து அனுமதிகளும் பெற்று மேற்கொள்ளப்படும் இந்த கட்டுமானப் பணிகள் கோயிலின் தொன்மையை பாதிக்கும் வகையில் இருக்காது. இவை ஆகம விதிகளுக்கு எதிரானதல்ல. சன்னதி, தெய்வம், ஓவியங்களுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும்,” என உறுதி அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாய்தள பாதை, நடை மேம்பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்தார்.