சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் ரூ.13.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறையின், கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10 கல்லூரிகளில் 22,455 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.138.13 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.11.15 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களில் முதல்வரின் கல்விச்சோலை வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடன் கூடிய 32 வகுப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், கணினி அறை, ஆய்வுக் கூடங்கள், நூலகம், மின்தூக்கி மற்றும் அடிப்படை வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல், சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப் பள்ளிக்கு ரூ.2.79 கோடியில், உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பள்ளிக்கட்டிடம் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடங்களை, மாணவர்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிய வசதிகள், முதலாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரையிலான வகுப்பறைகளுக்கு சென்று பாடம் கற்பிப்பதை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளிடம் முதல்வர் கலந்தரையாடினார். ஆய்வகங்களில் மாணவ, மாணவியர்கள் மேற்கொண்ட செய்முறை ஆய்வுகளையும் பார்வையிட்டார்.
இப்பள்ளியில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் 252 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம், இரு பள்ளிகளிலும் பயிலும் 1,131 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் 166 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல தேசிக அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஎம்பார் ஜீயர் மடம் ஸ்ரீ அப்பன் உலகாரிய இராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.