சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் விஷ்ணுபிரசாத் (கடலூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ஜோதிமணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), ஆர்.சுதா (மயிலாடுதுறை), கோபிநாத் (கிருஷ்ணகிரி), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்) ஆகிய 9 பேர் காங்கிரஸ் எம்பிக்களாக உள்ளனர்.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸின் மகளிரணி நிர்வாகியாக இருந்தவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் கரூர் மாவட்டத்தில் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் கூட்டணி கட்சிகள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இதற்கிடையில், 2026 தேர்தலில் அதிக இடம், ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி குரல் கொடுத்துள்ளார். சட்டப்பேரவை கட்சித் தலைவரான ராஜேஷ்குமாரும் ஆட்சியில் பங்கு என்ற கருத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் காங்கிரஸ்- திமுக இடையே கடை நிலையில் சுமுகமான உறவு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதுமட்டுமின்றி, காங்கிரஸ் எம்.பி. தொகுதிகளில், பெரும்பாலான எம்.பி.க்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள், அலுவலகம் அமைத்து தரவில்லை என்ற குற்றச்சாட்டும் அக்கட்சி எம்.பி.க்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் திமுக நிர்வாகிகளால் காங்கிரஸ் எம்.பி.களுக்கு பல்வேறு இடையூறுகளும் கொடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும், திமுக-காங்கிரஸ் இடையே பிளவு ஏற்படுவதற்கான சூழல் நிலவி வருவதாக தனது பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு கட்சிகளும் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றன என தமிழக மக்களுக்கு தெரிவிக்கவும், காங்கிரஸ் எம்.பி.க்கள், உள்ளூர் அளவில் திமுகவினரிடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஒத்துழையாமை குறித்து புகார் தெரிவிக்கவும், செல்வப்பெருந்தகை தலைமையில் எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலினை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார்.