2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2020 நவம்பர் 6-ல் திருப்பூர் வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காங்கயம் காளைக்கு காங்கயம் நகரின் மையப்பகுதியில் சிலை அமைக்கப்படும்” என அறிவித்தார். அது அறிவிப்போடு நின்று போன நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலினும் அதே உத்தரவாதத்தை அளித்துச் சென்றார். ஆனால், ஆண்டுகள் 4 ஆன நிலையிலும் இன்னும் காளைக்கு சிலை வந்தபாடில்லை. காளைக்கு சிலை வைத்து பெயரெடுப்பது யார் என்பதில் திமுக-வுக்குள்ளேயே இரண்டு கோஷ்டிகள் தெற்கு வடக்காக இழுப்பது தான் பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.
காங்கயம் காளைக்கு சிலை அமைக்க அனுமதிக்காததைக் கண்டித்து முன்னாள் காங்கயம் ஒன்றியக் குழு தலைவர் மகேஷ்குமார் சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். அதை ஆதரிக்கும் விதமாக, வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளருமான கார்த்திகேய சிவசேனாபதி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கடிதம் எழுதினார். அப்படியும் வேலை நடக்கவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மகேஷ்குமார், “காங்கயம் காளைக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிலை அமைக்க 2022 மார்ச் மாதமே ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, சிலை அமைக்க அனுமதி மறுத்துவிட்டார் ஆட்சியர். ஒன்றிய அலுவலகத்தில் இல்லாமல் வேறு பொது இடத்தில் சிலையை அமைக்கலாம் என சிலர் யோசனை தெரிவித்தனர்.
இதையடுத்து, கரூர் – தாராபுரம் சாலை சந்திப்பு அருகே சிலையை அமைக்க அனைத்துத் துறையினரிடமும் தடையில்லா சான்று பெற்றோம். ஆனாலும், ஆட்சியரிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அதேசமயம், எங்களுக்கு அனுமதி கொடுக்க யோசித்தவர்கள், காங்கயம் காளைக்கு சம்பந்தமே இல்லாத உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே சிலை அமைக்க அனுமதி கொடுத்து அங்கு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. காங்கயம் காளைக்கு சிலை வைத்தால் யாருக்கு பேர் கிடைக்கும் என்ற போட்டா போட்டியில் தான் சிலைவைக்கும் பணி தாமதமாகி வருகிறது” என்றார்.
காங்கயம் திமுக-வினரோ, ”காங்கயத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், கார்த்திகேய சிவசேனாபதியும் இரண்டு அணிகளாக அரசியல் செய்து வருகிறார்கள். இம்முறை காங்கயத்தில் போட்டியிட சிவசேனாபதியும் ஆர்வமாய் இருக்கிறார். இதனால் காளைக்கு சிலை வைத்து யார் அதன் பலனை பெறுவது என்பதில் இரு தரப்புக்கும் இடையில் போட்டி இருப்பது உண்மைதான். அதனால் இருவருமே அமைதி காக்கிறார்கள்.
கோவை பந்தயசாலை, அவிநாசி, திருச்சி, உடுமலை உள்ளிட்ட இடங்களில் காங்கயம் காளைக்கு சிலை வைத்திருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட காங்கயத்தில் சிலை வைக்க முடியாமல் கோஷ்டி அரசியல் முட்டுக்கட்டை போடுகிறது. முக்கியமாக, கார்த்திகேய சிவசேனாபதிக்கு இதில் பெயர் கிடைத்துவிடக்கூடாது என்பதில் சிலர் தீவிரமாக இருக்கிறார்கள். இதற்கு நடுவில் அமைச்சர் சாமிநாதன் தரப்பில், ‘காங்கயம் காளை சிலை அமைப்பு சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திவிட்டதால் இந்த விஷயத்திலிருந்து பலரும் தள்ளி நிற்கிறார்கள்” என்கிறார்கள்.
சிபிஎம் கட்சியின் காங்கயம் தாலுகா குழு உறுப்பினர் இரா.செல்வராஜ் நம்மிடம் பேசுகையில், “நாங்கள் எங்கள் கட்சியின் கிளை மாநாட்டில் இது தொடர்பாக 2 முறை தீர்மானம் நிறைவேற்றினோம். அமைச்சர் கே.என். நேருவுக்கும் கடிதம் அனுப்பினோம். காங்கயத்தில் காளை சிலை வைத்தால், அதற்காக போராட்டங்களை நடத்தியவர்களுக்கும், திமுக-வில் ஒரு தரப்புக்கும் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதாலேயே தாமதம் செய்வதாக அறிகிறோம். இப்போது சிலை எல்லாம் தயாராகி வந்துவிட்ட நிலையில் இதில் அரசியல் நடத்திக் கொண்டிருக்காமல் விரைவில் சிலையை நிறுவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.
காங்கயம் காளைக்கு சிலை வைப்பதில் என்ன சிக்கல் என கார்த்திகேய சிவசேனாபதியிடம் கேட்டதற்கு, “காங்கயத்தில் காளைக்கு சிலை வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அதற்காக முதல்வர், துணை முதல்வருக்கு கடிதம் எழுதியதை நான் அரசியலாக பார்க்கவில்லை” என்றார். இது விஷயமாக அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கேட்டதற்கு, “காங்கயம் காளை சிலையானது காங்கயம் ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் சாலையில் செல்வோர் பார்வையில் படும்படி அமைக்கப்படுகிறது.
இதற்காக வேறு யாரும் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. அரசே அமைப்பதால் நிதி ஆதாரத்தை பொறுத்து கொஞ்சம் தாமதமானது. சிலை வைக்கப் போவதை தெரிந்துகொண்டு யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். ஆனால், மக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், பட்டா உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண வேண்டியது முதல் வேலை. அதை முடித்துவிட்டுத் தான் காட்சிப் பொருளாக வைக்கப்படும் காளை சிலைக்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பணிகளை விரைவாக முடித்து காங்கயம் காளை சிலை சீக்கிரமே திறக்கப்படும்” என்றார். காளைக்கு சிலை வைப்பதில் இனியும் கலக அரசியல் செய்யாமல் ஆகவேண்டிய பணிகளை கவனித்தால் நல்லது!