சென்னை: கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது? என்று நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் தெருநாய்கள் பிரச்சினை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கான தீர்வு மிகவும் சிம்பிள். உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் கழுதைகள் எங்கே என்று கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது? ஆனால் இப்போது கழுதைகளையே காணவில்லை. அதை யாராவது காப்பாற்றவேண்டும் என்று பேசினார்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் தெருநாய்க்கடி பிரச்சினை பெரியளவில் தலைதூக்கியுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்மையில் தனியார் தொலைகாட்சி ஒன்றில் தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், கமல்ஹாசன் இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.