சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்விக் கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாணவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவதை தடுக்க விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர் தரப்பிடம், ‘இதுபோன்ற உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.