சென்னை: கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சென்னை அயனாவரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் நிதின்சாய் என்பவரை காரை ஏற்றி கொலை செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகியும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு சரண் அடைந்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி, சந்துரு தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜூன் மாதம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்துரு, மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ளது. அவர் 45 நாட்களாக நீதிமன்ற காவலில் உள்ளார். எனவே, ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் சந்துருவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தினமும் காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும்வரை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தலைமறைவாக கூடாது’ என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.