கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பங்கிங்காம் கால்வாயை தூய்மைப்படுத்தும் நோக்கில், தூய்மையே சேவை 2025 என்ற தூய்மைப் பணி இன்று தொடங்கப்பட்டது. இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜி.கராட்கர் இதனை தொடங்கிவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. நகரியப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கடைகள் மற்றும் இறைச்சி அங்காடிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இக்கால்வாயில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால், கால்வாயை தூர்வார வேண்டும், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கல்பாக்கம் நகரியப்பகுதியின் மத்திய பொதுப்பணித்துறை மற்றும் புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து துய்மையே சேவை 2025 என்ற தலைப்பில், தூய்மை பணிகளை இன்று மேற்கொண்டது.
இதில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் கராட்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். மேலும், பக்கிங்காம் கால்வாய் தூய்மை பணிகளை தொடங்கிவைத்தனர். இதில், ஊராட்சியின் தூய்மை பணியாளர்கள் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை ஊழியர்கள் பங்கேற்று கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதேபோல், ஊராட்சியின் பல்வேறு முக்கிய இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், ஜிஎஸ்ஒ. நிர்வாக இயக்குநர் சேதுராமன், ராஜ்யசபா எம்பி.தனபால், எஸ்டேட் அதிகாரி சாமிகண்ணன், நகரிய மேற்பார்வையாளர் ராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.