சென்னை: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தேவைப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சிகள் சுதந்திரமாகச் செயல்படவும், குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உதவும் விதமாக உள்ளாட்சிகளின் நிதி நிருவாக அனுமதி வரம்புகளை உயர்த்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிருவாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும், வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பதை ரூ.20 லட்சம் ஆகவும், மாவட்ட ஊராட்சிகளுக்கான அனுமதி வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தி வழங்கிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற ஊக்கமளித்துள்ளார்.
நகரங்களை ஒட்டிய 690 ஊராட்சிகள், 278 மலைப்புர ஊராட்சிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட சிறப்பு மானியம்: தமிழ்நாட்டில் நகர்ப்புரங்களை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு, தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.69 கோடியும் மலைப்பிரதேசங்களிலுள்ள 278 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.30 கோடியும் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு இந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
600 புதிய கிராமச் செயலகங்கள்: ஊராட்சிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிற துறைகளுடன் ஊராட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவும் 600 கிராமச் செயலகங்கள் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டு, 600 கிராமச் செயலகங்களுக்கான கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்றுப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 100 நாட்களுக்கு திறன் சாரா வேலை வாய்ப்பினை வழங்க உறுதி செய்கிறது. இந்திய அளவில் மனித சக்தி நாட்கள் உருவாக்குவதில் தமிழ்நாட்டின் செயல்திறனானது ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு மனித சக்தி நாட்கள் உருவாக்குவதில், தேசிய அளவில் 2022-2023 ஆம் ஆண்டில் இரண்டாம் இடமும், 2023-2024 ஆம் ஆண்டில் முதல் இடமும், 2024-2025 ஆம் ஆண்டில் மூன்றாம் இடமும் பெற்று சிறந்த மாநிலம் எனும் பெருமையை ஈட்டியுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டு முதல் 2024-2025 ஆம் ஆண்டு வரை சராசரியாக 66.91 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 77.37 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியதன் மூலம் தேசிய அளவில் தமிழ்நாடு பாராட்டப்படுகிறது.
அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டில 88,269 மாற்றுத் திறனாளிகளுக்கும், 2022-2023 ஆம் ஆண்டில் 98,567 மாற்றுத்திறனாளிகள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், 2023-24 ஆம் ஆண்டில் 1,16,622 மாற்றுத் திறனாளிகளுக்கும், 2024-2025 ஆம் ஆண்டில் 1,12,019 மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைகள் வழங்கி தேசிய அளவில் முதலிடங்கள் பெற்று தமிழ்நாடு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல, 2021-2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது தமிழ்நாடு. 2021-2022 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தில் 15 நாள்களுக்குள் தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு ஊதியம் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் – II: இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட தலா ரூ.30 லட்சம் சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஓதுக்கீடுகளால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் படிப்படியாக அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2021-22 முதல் 2024-25 வரை 10,187 கிராம ஊராட்சிகளில் 69,760 பணிகள் ரூ.4,277.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.176 கோடியில் ஊரக நூலகங்களைப் புதுப்பித்தல்: அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 7,924 நூலகங்கள் ரூ.176.02 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதிகளில் 5,000 சிறு பாசன ஏரிகளைப் புதுப்பித்தல்: 2024-2025 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் 5,000 சிறுபாசன ஏரிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப, 3,194 சிறுபாசன ஏரிகள் ரூ.213.07 கோடி மதிப்பீட்டில் மாநில நிதி மூலம் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகளின் மூலம் 706 சிறுபாசன ஏரிகள் ரூ.45.39 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்: முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் ரூ.8,000 கோடி செலவில் 20,000 கிலோமீட்டர் கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த அனுமதி அளித்துள்ளார். இதுவரை, 12,572 கிலோமீட்டர் நீளமுள்ள 9,696 சாலைகள் ரூ.4,609 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 6,671 கி.மீ சாலைகள் ரூ.3,529 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம்: இத்திட்டம், மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற நிதிப் பகிர்வுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், 4,182 கிலோ மீட்டர் நீளமுள்ள 947 சாலைப்பணிகளும் 83 புதிய பாலங்களும் ரூ.3,061 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டுள்ளன.
நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 505 கி.மீ. நீளமுள்ள 283 சாலைகள் மற்றும் 308 பாலங்கள் ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புரத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் 678.62 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.267 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,990 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள் ரூ.627 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில சிறப்பு நிதியின் கீழ் 34 உயர்மட்டப் பாலங்கள் 18 மாவட்டங்களில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டக்கூறு நிதியின் கீழ், 119 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ரூ.578.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் புதிய முயற்சியாக கிராமப்புரங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் விதமாக 16 மாவட்டங்களில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் 22 எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படுகின்றன.
கலைஞரின் கனவு இல்லம்: 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 2030-ம் ஆண்டுக்குள் குடிசையில்லாத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னதக் குறிக்கோளுடன் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக 8 லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வீடுகள் ஒவ்வொன்றுக்கும் திராவிட மாடல் அரசு ரூ.3,50,000 தொகையை பயனாளிகளுக்கு மானியமாக வழங்குகிறது.
இத்திட்டத்தின்படி 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தேவைப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஊரக வீடுகள் சீரமைத்தல்: ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் 2000-2001 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டுள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை வீடுகளைப் பழுதுபார்க்கும் பொருட்டு, 2024-2025 ஆம் ஆண்டில் ரூ. 1041.32 கோடி மதிப்பீட்டில் 1,48,634 வீடுகளைச் சீரமைத்திட திராவிட மாடல் அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. இதுவரையில் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதில் 1,03,177 வீடுகள் சீரமைக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்: முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 2000-01 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு தற்போது பழுது பார்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை வீடுகளுக்கு மாற்றாக 210 ச.அடி பரப்பளவில் மறுகட்டுமானம் செய்திடும் பொருட்டு வீடு ஒன்றிற்கு ரூ.2.40 லட்சம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளது வரை 15,485 எண்ணிக்கை வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது.
ரூ.261 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்பு: பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் சமத்துவபுரங்கள் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையுடன் அமைக்க ஆணையிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 238 சமத்துவபுரங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமத்துவப்புரத்திலும் 100 வீடுகள் அமைக்கப்பட்டு, அனைத்துச் சாதியினரும் ஒன்றாகக் கூடி அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் புரட்சிகரமான ஒரு சூழல் உருவாகியுள்ளன.
சமத்துவப்புரங்களில் பழுதுபட்ட குடியிருப்புகள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ரூ.261.17 கோடி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், கொழுவாரி சமத்துவபுரம் , சிவகங்கை மாவட்டம், கோட்டை வேங்கன்பட்டி சமத்துவபுரம் புதுப்பிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதேபோல, திருவள்ளுர் மாவட்டம் இராமசமுத்திரம், திருச்சி மாவட்டம் காட்டுக்குளம், கடலூர் மாவட்டம் தொளார் ஆகிய இடங்களில் சமத்துவப்புரக் குடியிருப்புகளின் கட்டுமானங்கள் முடிவுற்று முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
தற்போது, பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின்கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் 8 இடங்களில் புதிய சமத்துவபுரங்கள் அனுமதிக்கப்பட்டு 800 வீடுகள் கட்டுமான பணி பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் வீடுகளைச் சீரமைத்தல்,மறுகட்டுமானம்: 2023-ம் ஆண்டில் சென்னையை ஒட்டியுள்ள 3 மாவட்டங்களிலும், தூத்துக்குடியை ஒட்டிய 4 மாவட்டங்களிலும் பெய்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் முழுவதும் பாதிக்கப்பட்ட 3,591 வீடுகளை மீண்டும் கட்ட தலா ரூ.4 லட்சம், மற்றும் 1,057 எண்ணிக்கை பகுதி சேதமடைந்த வீடுகளைப் புதுப்பித்திட வீடு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை மொத்தம் ரூ.168.14 கோடியில், மொத்தமாக 4,648 வீடுகள் அனுமதிக்கப்பட்டு 4,159 வீடுகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 489 வீடுகள் முன்னேற்றத்தில் உள்ளன.
பிரதம மந்திரியின் ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசால் 39 சதவீதம் மாநில அரசால் 61 சதவீதம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 09.05.2021 முதல் நாளதுவரை 3,53,141 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் (PM-JANMAN) கீழ் பழங்குடியின மக்களுக்கு திராவிட மாடல் அரசு 70 சதவீதம் மத்திய அரசு 30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்து 300 சதுர அடி கொண்ட வீடு கட்டுவதற்குச் சமதளப் பகுதியில் ரூ.5.07 லட்சம், மலைப்பகுதிகளில் ரூ.5.73 லட்சம் எனத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11,875 வீடுகள் அனுமதிக்கப்பட்டதில் இதுவரை 2,751 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சிய வீடுகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 7,429 வீடுகள் கட்டுவதற்கு ரூ.419.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளதுவரை 4,478 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,951 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
பழங்குடியினருக்காக 23 மாவட்டங்களில் 3,881 வீடுகள் ரூ.176.46 கோடியில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 3,599 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவுறும் நிலையில் உள்ளன.
நமக்கு நாமே திட்டத்தின் (NNT) கீழ் பொதுமக்கள், நிறுவனங்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திராவிட மாடல் அரசு தனது பங்காக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்கள் பங்களிப்புடன் மொத்தம் ரூ.642.42 கோடி மதிப்பீட்டில் 6,567 பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 6,507 பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இவற்றுள் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்காக 485 கட்டடங்களும், பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம், கதிர் அடிக்கும் களம் போன்ற கட்டமைப்புகளும் கட்டப்பட்டுள்ளன.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில், ரூ.2,808 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 37,047 பணிகள் ரூ.2,693.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் 34,068 பணிகள் ரூ.2,299.56 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில், ரூ.984 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 9,826 பணிகள் ரூ.863.01 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் 8,510 பணிகள் ரூ.685.99 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
தனிநபர் இல்லக் கழிப்பறைகள்: அனைத்து ஊரகக் குடும்பங்களும் கழிப்பறை வசதி பெறுவதை நோக்கமாகக் கொண்டு 4 ஆண்டுகளில் 3,38,357 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட போதிய இடவசதி இல்லாதவர்கள் பயன்பாட்டுக்காக 2,123 சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.127.05 கோடியில் கட்டப்பட்டுள்ளன. பொது இடங்கள், நூலகங்கள், பள்ளிகள், அரசுக் கட்டடங்கள் போன்றவற்றின் அருகில் 6,684 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.195.43 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்டம்: ஊரகப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கும் சிறப்புத் திட்டத்தின்படி 2021 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் இதுவரை 1,11,45,898 வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 13,80,767 வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
மத்திய அரசின் விருது: 2021-22ஆம் ஆண்டு ஸ்வச் சர்வேக்ஷன் கிராமினில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்துக்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு மேதகு குடியரசுத் தலைவரால் மூன்றாம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.