கோவை: பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்பனையைத் தடுக்க கடும் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அமைச்சர்கள் கூறினார். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆடை தயாரிப்பில் பருத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக அளவு பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது உற்பத்தி மற்றும் தரம் ஆகியவை குறைந்துவிட்டன.
விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ‘மோடி மிஷன்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பருத்தி சாகுபடியை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ‘டீம் காட்டன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குத் தேவையான அளவுக்கு பருத்தி உற்பத்தி செய்வது அவசியம். உள்நாட்டுத் தேவைக்குபோக மீதமுள்ளவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும். தேவையைக் கருத்தில் கொண்டு, அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
தென்னிந்தியாவில் இயந்திரப் பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புழு (போல் வேர்ம்) தாக்குதலை எதிர்கொள்ள ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தமிழக விவசாயத் துறை அமைச்சருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அவர் வரவில்லை. நாங்கள் மத்திய, மாநிலம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை.
பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்ற தொழில் துறையினரின் கோரிக்கையை பரிசீலித்து வருகிறோம். கலப்பட உரம், போலி விதை பிரச்சினை அதிகம் உள்ளது. அபராதம் விதிக்கும் வகையில் மட்டுமே தற்போது சட்டம் உள்ளது. எனவே, இவற்றை முற்றிலும் தடுக்க தண்டனைகளை கடுமையாக்கி, சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.