பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் தமிழகத்துக்கு விநாடிக்கு 43,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாகமண்டலா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
குடகு மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 120.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 20,315 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 18,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு இதேஅளவு நீர்வரத்து தொடர்ந்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 20,543 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் 25,000 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு மொத்தமாக 43,300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.