சேலம்: ‘டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, காரில் கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தது குற்றமா? தேவையின்றி இதை அரசியல் ஆக்குகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 16-ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு சென்றேன். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். தமிழகத்தில் நான் மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து விசாரித்தார். அவரை சந்தித்துவிட்டு காரில் வெளியே வரும்போது முகத்தை துடைத்தது குற்றமா? இதை தேவையின்றி அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. நான் முகத்தை மூடியபடி வந்ததாக சில ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறார். சிறுபிள்ளைத்தனமாக பேசுவது அழகல்ல. நான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது சட்டையை கிழித்துக் கொண்டு வந்தவர், என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறலாமா?
அதிமுக உட்கட்சி விவகாரங்களில் ஒருபோதும் தலையிட மாட்டோம் என அமித் ஷா கூறினார். தற்போதும் அதை நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை. இதுபோன்ற கேள்வியை இனி கேட்க வேண்டாம். டிடிவி.தினகரன் கடந்த சில நாட்களாக என்னை விமர்சித்து வருகிறார். அவரது உள்நோக்கம் புரியவில்லை. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். பிரிந்து சென்றவர்கள் என்டிஏ கூட்டணியில் தொடர்வதாக அறிவிப்பது, அவர்களது விருப்பம். நான் ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் ஆட்சியை வீழ்த்த சில அரசியல்வாதிகள் முயன்றபோது, மத்திய பாஜக அரசுதான் காப்பாற்றியது. இவ்வாறு அவர் கூறினார்.