கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை ஒட்டி ஆடி 19-ம் தேதியான இன்று (ஆக.4) பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் தலைத்தேங்காய் உடைத்து கொள்வதற்கு நேர்ந்து கொண்ட பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்துக்கு வந்திருந்தனர்.
விழாவையொட்டி காவிரியில் இருந்து நேற்று ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சக்தி அழைப்பை தொடர்ந்து இரவு அம்மன் காவிரி ஆற்றுக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இன்று (ஆக.4) காவிரி ஆற்றில் குளித்து விட்டு வந்து கோயில் முன் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர். பலர் சாமிக்கு முடி இறக்கி மொட்டை தலையுடன் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பரம்பரை பூசாரி பெரியசாமி பாதக்குரடு (ஆணி செருப்பு) அணிந்து, அம்பு போட்டவுடன் (இரும்பு பட்டை கம்பியால் அடித்துக்கொள்ளுதல்) அருள் பெற்று வரிசையாக அமர்ந்திருந்த 520 பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். தங்கள் தலையில் உடைத்த தேங்காய்களை பக்தர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் சேகரித்து எடுத்து சென்றனர்.
ஒரு சிலருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அவர்களுக்குக் கோயில் சார்பில் தலையில் மஞ்சள் வைக்கப்பட்டது. அதிகம் காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ முகாமில் தலையில் தையல் போடப்பட்டது. கோயில் வளாகம், தனியார் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை திருப்பூர் இணை ஆணையர் ரத்ன வேல் பாண்டியன், கரூர் உதவி ஆணையர் ரமணிகாந்தன், செயல் அலுவலர் நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர். பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினமே மேட்டுமகாதானபுரம் வந்து தங்கியிருந்து தலைத் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கரூர் மற்றும் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கரூர் ஏடிஎஸ்பி பிரபாகரன் டிஎஸ்பிக்கள் செந்தில்குமார் (குளித்தலை) முத்து சாமி தலைமையில் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கரூர், திருச்சி, முசிறி, மணப்பாறை ஆகிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.