சென்னை: கரூர் துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும், தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். நெரிசல் ஏற்பட்டது குறித்தும் கேட்டறிந்தார். விஜய்யுடன் அவர் 15 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.
பட்டினப்பாக்கம் சென்ற விஜய் இதற்கிடையே, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், விஜய் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, விஜய் நேற்று காலை நீலாங்கரை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு, பட்டினப்பாக்கம் வீட்டுக்கு சென்றார். இதனால், அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.