மதுரை: கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட பாத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நெரிசலான இடத்தில் கூடினர்.
அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக கூட்ட நெரிசலில் சிக்கி சிறார்களும், பெண்களும் என 40 பேர் பலியாகினர். கரூர் கூட்டத்தில் சிறார், பெண்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது அவசியமாகிறது.
எனவே ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்க வாய்ப்புள்ளது.