கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 5 பேர் கருர் அருகே ஏமூர் என்ற ஊரை சேர்ந்தவர்கள்; அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கருர் அருகே ஏமூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஹேமலதா (28), மகள்கள் சாய் லக்ஷனா (9), சாய் ஜீவா (5) உயிரிழந்துள்ளனர். மேலும், ஏமூரை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்தி என்பவரின் மனைவி பிரியா, இவர்களது மகள் தரணிகா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கரூரில் ஓரே ஊரை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.