கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்கை அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.ஜோதிமணி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தை கூறும்போது, “கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 39 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்று அறிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில்போது, கரூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் லெனின் பிரசாத், மாநில துணைத் தலைவர் ஸ்வர்ணா சேது ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும், “நேற்று (27.09.2025) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் கரூரில் பங்கெடுத்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அடுத்த 3 நாட்களுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு, நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.