கரூர்: கரூரில் இன்று (செப்.17) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்குகிறது. முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்டச் செயலாளருமான வி.செந்தில்பாலாஜி வரவேற்கிறார். பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கட்சிப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருது, பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீத்தாராமனுக்கு அண்ணா விருது, முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது, மறைந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரான குளித்தலை சிவராமன் குடும்பத்தாருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருது, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்படுகிறது.
இதேபோல, முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருது மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்படுவோருக்கு நற்சான்று, பண முடிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. விழாவையொட்டி, 3,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.