புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதற்காக கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன், திமுக உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத், திமுக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.
திமுகவினர் அமைதி பேரணி: கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி மாநில திமுக சார்பில், புதுச்சேரி சுதேசி மில் அருகில் மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் திமுக–வினர் ஒன்றிணைந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டனர்.
அவர்கள் பேரணியாக சென்று அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் அந்தந்த தொகுதி கழகம் சார்பில், கருணாநிதியின் படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.