சென்னை: கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை – திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப்பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நேற்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும், திருவள்ளவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆக.16-ம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போது, 8 மீட்டர் உயரத்தில் ஆர்ச்சில் உள்ள போல்டுகளை சரி செய்யும் பொழுது சுத்தியல் கை தவறி விழுந்ததில் கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த இடத்தில் மட்டும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி தடுப்பு அமைக்கப்பட்டது.
விரிசல் ஏற்பட்ட இடத்தில் 2 மீட்டர் நீளம், 2.40 மீட்டர் அகலம், கொண்ட அதே வடிவமைப்பில் அதே தரத்துடன் கம்பி இழையிலான கண்ணாடி கடந்த செப்.8-ம் தேதி பொருத்தப்பட்டது. மேலும், போதுமான எடையைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாங்குத்திறன் உறுதி செய்யப்பட்டதில் கண்ணாடி பாதுகாப்பாக உள்ளது. 77 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலம், ஒரேநேரத்தில், 650 பேர் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டு பராமரிப்பு
மேலும், ஒப்பந்ததாரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டு என்பதால், சேதமடைந்த கண்ணாடி ஒப்பந்ததாரரின் செலவிலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது, அனைத்து பார்வையாளர்களும், கண்ணாடி பாலத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நெடுஞ்சாலைத் துறை செயலர் இரா.செல்வராஜ், இயக்குநர் ஆர்.செல்லத்துரை, நெடுஞ்சாலைத் துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.