சென்னை: பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்காதீர்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்பட்ட ஆற்றல் மிகு உடற்கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்களின் நல்வாழ்வை உறுதிபடுத்துவதை நோக்கமாக கொண்டு ‘உடற்கல்வி ஆசிரியர் வளநூல்’ எனும் புத்தகத்தை 3 தொகுதிகளாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். முதல் பிரதியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றுக்கொண்டார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வி மட்டுமின்றி, விளையாட்டு மூலமாகவும் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். நட்பு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, குழுவாக பணியாற்றுதல், உத்திகளை திட்டமிடுதல், அதை செயல்படுத்துதல் போன்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் விளையாட்டு நமக்கு கற்றுக்கொடுக்கும்.
படிப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடும் மாணவர்கள் தனிச்சிறப்புடன் இருப்பார்கள். எனவே கல்வி, விளையாட்டு இரண்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான உதவிகளை செய்து வருகிறோம்.
தகுதியுள்ள வீரர்கள் என்ற இணையதளத்தில் அதற்காக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். நடப்பாண்டுக்கான தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.36 கோடி பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் சார்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்பு ஆசிரியர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். உடற்கல்வி பாடவேளையை (பிஇடி பீரியட்) எந்த ஆசிரியரும் கடன் வாங்கி அதில் மற்ற பாடங்களை நடத்த வேண்டாம்.
வேண்டுமானால் கணிதம், அறிவியல் பாடவேளையை பிஇடி பீரியடுக்காக கடன் கொடுங்கள். பிஇடி பீரியடுகள் என்பது மாணவர்களின் உரிமை. அதில் மாணவர்கள் நிச்சயமாக விளையாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் பி.வி.பி.முத்துக்குமார், தனியார் பள்ளி சங்கத் தலைவர் அரசகுமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், பரந்தாமன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.