சென்னை: கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை தனியார் பள்ளி வேன் கடக்க முயன்றபோது, விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி அளித்தும், மாவட்ட ஆட்சியரகம் ஒப்புதல் வழங்காததால் கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் விபத்து தொடர்பாக 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே வாரியத் தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.