சென்னை: தமிழக அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் 2.37 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கி சாதனை படைத்துள்ளது.
மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதையொட்டி தொடங்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது உள்பட பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறது.
அந்தவகையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 4.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392 கோடியும், 2022-23ம் நிதியாண்டில் 4.49 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642 கோடியும், 2023-24ம் நிதியாண்டில் 4.79 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,074 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து 2024-25ம் நிதியாண்டில் ரூ.35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4.84 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி சாதனை புரிந்துள்ளது. இதையடுத்து தற்போது 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில் மே 7-ம் தேதி வரையில் 7,917 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.698 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி திமுக அரசின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் 18.29 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2.37 கோடி மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.