புதுக்கோட்டை: ‘தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்’ என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் செல்வோம்.
தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை தடுக்க வேண்டியது மத்திய அரசுதான். மத்திய அரசைக் குற்றம்சாட்டினால் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனை வந்துவிடுமோ என்ற பயத்தில் தமிழக அரசு மீது பாமக தலைவர் ராமதாஸ் குறைகூறி வருகிறார். மணல் குவாரி தொடங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.