Last Updated : 07 Sep, 2025 05:38 PM
Published : 07 Sep 2025 05:38 PM
Last Updated : 07 Sep 2025 05:38 PM

ராமேசுவரம்: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவு குறித்து எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்த தேவையில்லை என இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இலங்கையின் செய்தித் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸிடம் இலங்கையின் அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் கச்சத்தீவு பயணம் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இலங்கை அதிபர் அநுர குமார திசா நாயக்க வட மாகாணத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
அந்த பயணத்தின் போது கச்சத்தீவு சென்றிருந்தார். அதிபர் கச்சத்தீவு சென்றது சிறப்புப் பயணம் கிடையாது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இது குறித்து எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்த தேவையில்லை. தென்னிந்திய அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக கச்சதீவு விவகாரத்தினை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க “கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” – என்று தெரிவித்திருந்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பான இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தவாக தலைவர் த.வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US
தவறவிடாதீர்!