அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழன் உருவம் பொதித்த நாணயம் வெளியிடுகிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ரோடு ஷோவாக கோயிலை வந்தடைகிறார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர், அங்குள்ள சிற்பங்கள், கலாச்சாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, ராஜேந்திர சோழன் நினைவு நாணயம், திருவாசகம் உரைநடை நூலை வெளியிடுகிறார்.
36 ஆதீனங்கள் பங்கேற்பு: விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியை, சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 36 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் சந்தித்து ஆசி வழங்குகின்றனர். முன்னதாக, பிரதமரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் சிதம்பரம் எம்.பி.யான திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.