சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 35 லட்சத்து 43,103 பேர் இணைந்துள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இதற்காக செயலியும் உருவாக்கப்பட்டது. அதன்பின், ஜூலை 1-ம் தேதி இத்திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், ஜூலை 3-ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த ஜூலை 10-ம் தேதி திருவாரூர் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் முதல்வர், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார்.
இதையடுத்து, கடந்த 12-ம் தேதி சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதல்வர் திறந்து வைத்தார். அதன்தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்துக்குச் சென்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று மன்னம்பந்தல் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களைச் சேர்த்தார்.
இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட செயலாளர் நிவேதா எம். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று இதுவரை 1 கோடியே 35 லட்சத்து 43,103 பேர் திமுக உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இந்நிலையில், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு தொடர்பாக, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலியில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், உறுப்பினர் சேர்க்கையை மேலும் விரைவுபடுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனைகளை வழங்குவார் என கூறப்படுகிறது.