சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலம் இணைந்த ஒரு கோடி குடும்பத்தினர் செப்.15-ம் தேதி பல்வேறு கருத்துகளை முன்வைத்து உறுதிமொழி ஏற்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலம், தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் தோறும் 30 சதவீதம் வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக்கும் திட்டத்தை கடந்த ஜூலை 3-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளன. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி தமிழகம் எங்கும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத் வாரியாக கீழ்க்கண்ட உறுதிமொழியை முன்மொழிய உள்ளனர்.
அதன்படி, “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் சேர்ந்து, தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக நான் போராடுவேன்.
வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக நிற்பேன். நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்.
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்புக்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் – தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்” என உறுதி ஏற்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.