சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை ஆக.11-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆக.13-ம் தேதி நடைபெறுகிறது.
வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கை பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி வாயிலாக விருப்பமுள்ளவர்களை திமுக உறுப்பினர்களாக்கும் பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆக.11-ம் தேதியுடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முடிவடைகிறது. எனவே, இம்முன்னெடுப்பை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆக.13-ம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், இக்கூட்டத்தில் ‘உடன் பிறப்பே’ வா சந்திப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, உடன்பிறப்பே வா நிகழ்வின் மூலம் நேற்று மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தொகுதி நிலவரம் குறித்து முதல்வரிடம் நிர்வாகிகள் விளக்கினர்.