பொதுமக்களுக்கு பாதுகாப்பான, ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் 9 அரசு வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநில அரசு துறைகளில் மென்பொருள் பயன்பாட்டை முறைப்படுத்தி, ஒருங்கிணைந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் (சிங்கிள் சைன்-ஆன்) கடந்த 2023-24 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளமானது பல பயனாளிகள் தங்களது உள்நுழைவு தரவுகள், இணையதளங்களை பயன்படுத்தும்போது இருக்கும் தடைகளை நீக்கி ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் எளிமையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இரு கட்டமாக அரசு துறைகளுக்கு இடையேயான சேவைகளை வழங்குதல், அரசு துறைகள் – பொதுமக்கள் இடையேயான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் தொடர் கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் இதுவரை 9 முக்கிய அரசுத் துறை வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதன்படி மின் அலுவலகம், நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் சிசிஎம்எஸ் தளம், டான்பிஃநெட், நேரடி பணப்பரிமாற்ற இணையதளம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மாநில உதவித்தொகை வலைதளம், பயிர் கணக்கெடுப்பு வலைதளம், கிரைன்ஸ், தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு ஆகிய அரசுத் துறை வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இதன்மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.