சென்னை: சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு வெட்டியெடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்குவாரி உரிமதாரர்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. சுற்றுசூழல் ஒப்புதல் பெறாமல் 2016 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான ஓராண்டு காலத்தில் வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து குவாரி உரிமம் பெற்றிருந்த 82 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என கூறியுள்ள நிலையில், ஒப்புதல் இல்லாமல் கல் குவாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்ட விரோதம். வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
எனவே, இழப்பீட்டுத் தொகையை செலுத்தும்படி அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குவாரி உரிமதாரர்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ள கட்டணத்தை கழித்துவிட்டு மீதத் தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் 3 வாரங்களில் அரசு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் கடிதம் கிடைத்த 2 மாதங்களில் இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.