சென்னை: ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெறும் விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பணிகளை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2023-ல் ‘மிக்சாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து, அதிக மழைப்பொழிவைத் தாங்கும் திறன் இல்லாத நிலையில் ஒக்கியம் மடுவு பாலம் இருந்தது தெரிந்தது. அதாவது இந்த நீர்வழிப்பாதை 90 மீட்டர் அளவிலும், குறைந்த உயரம் கொண்டதாகவும் இருந்தது.
இதனைச் சரி செய்யும் பொருட்டு தமிழக அரசு மற்றும் நீர்வளத் துறையுடன் கலந்தாலோசித்த பிறகு, நீர்வழிப்பாதையை 205 மீட்டராகவும், கூடுதலாக 1.5 மீட்டர் உயரத்தை அதிகரிக்கவும் முடிவு செய்தது. அதன்படி, ஒக்கியம் மடுவு பாலத்தின் விரிவாக்கப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 90 மீட்டராக இருந்த நீர்வழிப் பாதை, 120 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், பாலத்தின் முழு அளவு 205 மீட்டராக இருக்கும்.
80 சதவீத பணி நிறைவு: பாலத்தின் 3 நீர்வழிப்பாதைகளும் கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாலத்தின் மேல்பக்க நீர்வழிப்பாதை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழ்ப்புற நீர்வழிப்பாதையில் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகள் செப். 8-ம் தேதி வாக்கில் சுத்தம் செய்யப்படும்.
பாலம் அமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறுகின்றன. பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், புதிய பாலம் பொது பயன்பாட்டுக்காக தற்போதைய சாலையுடன் இணைக்கப்படும். இந்நிலையில் ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெறும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், பொது மேலாளர் (வழித்தடம்) செல்வம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறியதாவது:
வெள்ள அபாயம் குறையும்: ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு பகலாகப் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்ததும், இந்த பாலம் நீரின் ஓட்டத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும். மேலும் அருகிலுள்ள பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைத்து, பள்ளிக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளப் பாதிப்புகளிலிருந்து தீர்வை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.