சென்னை: ஐ.டி. துறையில் உலகம் முழுவதிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சர்வதேச தமிழ் பொறியாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தமிழர்களின் ரத்தத்தில் பொறியியல் ஊறியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் கட்டப்பட்ட துறைமுகங்களே இதற்கு சான்று. உலகம் முழுவதும் உள்ள வர்த்தக மையங்களுடன் தமிழர்கள் பன்னெடுங்காலமாக பங்குதாரர்களாக இருந்துள்ளனர். இதற்கான சான்றாக, கீழடியில் ரோமானிய காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரம்மாண்ட அணைகள், சிறந்த கோயில்களை தமிழக பொறியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டியுள்ளனர். குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மழைநீர் வடிகால்களுக்கு ஏற்றவாறு சாய்ந்த கூரையில் இருந்து வடியும் மழைநீர் துவாரங்கள் கொண்ட தூண்கள் வழியாக நிலத்துக்கு சென்றடைகிறது. அதேபோல, தமிழகம் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு சத்துணவு, இலவச மிதிவண்டிகள், மடிக்கணினிகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் முக்கிய காரணமாக உள்ளன.
தமிழகம் முழுவதும் கல்வியை ஊக்குவிப்பதன் பலனாக, முதுநிலை கல்வியில் தமிழகம் முதன்மை இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 54 சதவீத மாணவர்கள் முதுநிலை கல்வியில் சேருகின்றனர். நமது மாநிலம் இந்தியாவின் 6 சதவீத மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், தேசிய அளவில் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதத்தை வகித்துவருகிறது. தமிழகத்தின் ஐ.டி. சேவைகள் உலகமெங்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தமிழர்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்று கூறினார்.