குமுளி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஐயப்பனை தரிசிப்பதற்காக அக். 22-ம் தேதி சபரிமலை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது.
ஐப்பசி மாத வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு ஐயப்பனை தரிசிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்த நிலையில், பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அப்போது நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர்சூழலால் அவர் சபரிமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த மாதம் அவர் வர உள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசன் கூறும்போது, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார். வரும் 22-ம் தேதி கொச்சி விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். தொடர்ந்து கார் மூலம் பம்பை வந்து அங்கிருந்து நீலிமலை பாதை வழியே நடந்து செல்ல உள்ளார். இருப்பினும் மாற்று ஏற்பாடாக வாகனம் மூலம் சந்நிதானம் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
பக்தர்களிடையே குழப்பம்: இதற்கிடையே பாதுகாப்பு கருதி அவர் வருகை குறித்த முழு விவரமும் தேவசம் போர்டுக்கு வரவில்லை. குடியரசு தலைவர் வரும் நாளில் பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வரும்17-ம் தேதி மட்டுமே பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தரிசன முன்பதிவுகளை மேற்கொள்வதில் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.