கோவை: “எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் திருபுவனம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் ஏமாற்ற முடியாது. முழு உண்மை வெளிவர வேண்டும்,” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமார் (27) உயிரிழந்துள்ளார். இது ஒரு கொலை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2020 ஜூன் 22-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘லாக் அப் மர்ம மரணங்களுக்கு, உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்’ மக்களாட்சியா? அல்லது திரைமறைவு போலீஸ் ஆட்சியா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், தற்போது திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறை விசாரணையின் போது கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தனக்கு, எந்த சம்பந்தமும் இல்லாதது போன்றும், இதற்கு முழுக்க முழுக்க காவல் துறையினர் மட்டுமே காரணம் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அஜித்குமாரை சட்ட விரோதமாக விசாரிக்க உத்தரவிட்ட அந்த அதிகார மையம் யார்? என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே காவல் துறையினர், சட்டப்படி செயல்படாமல், திமுக நிர்வாகிகளின் உத்தரவுப்படி செயல்படுகிறார்கள் என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அஜித்குமார் கொலையிலும் இது உறுதியாகி உள்ளது. அஜித்குமார் கொலைக்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருந்துள்ளது. எனவே, இதற்கு காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.
சில அமைச்சர்களை அனுப்பி, அஜித்குமார் குடும்பத்துடன் பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. காவலாளி அஜித்குமார் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.