சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொது மக்களிடம் உள்ள செல்வாக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கட்சி நிர்வாகிகளை செப்.18 முதல் 21-ம் தேதி வரை மண்டல வாரியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காலையில் சென்னை மண்டல நிர்வாகிகளும், மாலையில் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளும் பங்கேற்றனர். அவர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
சென்னை மண்டல கலந்தா லோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, “எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், தாய்மொழியை மறந்துவிடாதீர்கள். உங்களால் தீர்க்க முடிந்ததை மட்டும் வாக்குறுதியாகக் கொடுங்கள். என்னை சமூகரீதியாக அடையாளப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். நான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதை நான்தான் சொல்ல வேண்டும்.
நான் யார் என்பது எனது நடவடிக்கைகளிலேயே தெரியும். என்னை திமுகவில் சேர்ந்துவிட்டதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நீதிக்கட்சியில் இருந்து வந்த கட்சிதான் திமுக. நமது கட்சியிலும் நீதி உள்ளது” என்று கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்துக்கு பொதுமக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது? 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேட்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இன்று (வெள்ளி) காலை கோவை மண்டலம், மாலை மதுரை மதுரை மண்டலம், நாளை காலை நெல்லை மண்டலம், மாலை திருச்சி மண்டலம், 21-ம் தேதி காலை விழுப்புரம் மண்டலம், மாலை சேலம் மண்டலம் மற்றும் புதுச்சேரி என நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.