சென்னை: “எதிரணியில் இருக்கும் பலருக்கு பூத் ஏஜெண்ட்களே இல்லாமல் இருப்பார்கள். ஆனால் திமுகவுக்கு மட்டும்தான் பூத் ஏஜென்ட்கள் என்ற பொறுப்பையும் உருவாக்கி தரும் தெம்பு, திராணி இருக்கிறது,” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இன்று 68,000 பூத் ஏஜண்ட்களை (BDA) வைத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று, அங்கு இருக்கும் மக்களிடையே திமுகவின் திட்டங்கள் எல்லாம் அவர்களைச் சென்று சேர்ந்து இருக்கிறதா எனச் சரி பார்க்க இருக்கிறார்கள். அப்படி இல்லை என்றால், அதைக் கொண்டு போய் சேர்க்கும் வேலையை அவர்கள் செய்ய இருகிறார்கள்.
இதுவரை எவ்வளவோ மக்கள் நலத்திட்டங்களைத் திமுக செய்திருக்கிறது. அதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறோம். ஆனால் சரி பார்க்கும் வேலையை இதுவரை எந்தவொரு தலைவரும் செய்ததில்லை. அப்படிப்பட்ட மகத்தான தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.இன்று ஒரு பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
இந்த இனத்தை எதிர்த்து வரும் எதிரிகளையும், இந்த இனத்திலேயே இருந்துகொண்டு துரோகம் செய்யும் துரோகிகளையும் முறியடிக்க வேண்டும். அதற்காக இந்த மகத்தான பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இந்தப் பயணத்தின் வழியாகத் தமிழ் இனத்துக்காக, தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எழுச்சிக்காக நீங்கள் எல்லோரும் ஓரணியில் திரண்டு, தமிழ்நாட்டுக்காக நிற்க விரும்புகிறீர்களா என்ற கேள்வியை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க இருக்கிறோம்.
இந்த இனத்தின் எதிரிகள், கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகிகள் இவர்கள் எல்லோரையும் முறியடிக்க வேண்டும். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும். அந்த அணியின் தலைவராகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும். அவர் இருந்தால் மட்டும் தான் விடியல் என்ற உண்மையை அவர்கள் இடத்தில் கொண்டுபோய் சொல்ல இருக்கிறோம்.
இந்தப் பயணம் இன்று ஜூன் 25-ம் தேதி ஆரம்பித்து இருக்கிறது. இந்தப் பயணத்தில் இன்று 234 தொகுதிகளிலும் இருந்து எங்களின் ஐடி விங், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு இந்தப் பணியை வழங்கிய முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பணியை இன்று 234 OTNAC எனப்படும் ஓரணியில் தமிழ்நாடு அசெம்பிளி கோ-ஆர்டினேட்டர், அந்தத் தொகுதி பார்வையாளர்களை நியமித்து அவர்களுக்குப் பயிற்சியை வழங்கியிருக்கிறோம். அடுத்ததாக இந்த 234 பேரும் 27-ம் தேதி தொடங்கி 29 வரை மிகப் பிரம்மாண்டமாக அங்கே இருக்கும் தொகுதிகளில் வாக்குச்சாவடி, பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்குப் பயிற்சியைக் கொடுக்க இருக்கிறார்கள். அந்தப் பயிற்சியில் பூத்களின் பாகங்களைப் பிரித்துக் கொண்டு அவர்களுக்கும் பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள்.
ஜூலை 1-ம் தேதி முதல்வர் இந்தப் பணியை முழுமையாகத் தொடங்கி வைப்பார். அடுத்தக்கட்டமாக இந்தப் பணியை ஜூலை 2-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கையில் எடுப்பார்கள். அடுத்து ஜூலை 3-ம் தேதி இந்த இயக்கம் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, அதன்மூலம் இந்த இயக்கத்துக்குப் புதிய உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கப் போகிறது திமுக. இந்த முயற்சி இதுவரை இந்தியாவில் நடந்ததில்லை.
உலகிலேயே எங்கும் நடந்ததில்லை என்று தான் கூறவேண்டும். எதிரணியில் இருக்கும் பலருக்கு பூத் ஏஜெண்ட்களே இல்லாமல் இருப்பார்கள். ஆனால் திமுகவுக்கு மட்டும்தான் பூத் ஏஜென்ட்கள் என்ற பொறுப்பையும் உருவாக்கி தரும் தெம்பு, திராணி இருக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.