சென்னை: அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, மாநில அடைவுஆய்வு மற்றும் அடிப்படை கற்றல்நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில், கற்றல் இடைவெளியை குறைத்து, ஒவ்வொரு குழந்தையும் தமிழ், ஆங்கிலம் வாசித்தல்திறன், அடிப்படை கணித திறன்களை முழுமையாக கற்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவதில், கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியம். பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்யும்போது வகுப்பறை நடைமுறைகள், மாணவர்களின் வேலை புத்தகம் பயன்படுத்தப்படும் விதம், மாணவர்களின் பங்கேற்பு நிலை, தனிப்பட்ட கற்றல் வழிகாட்டல் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
மேலும், மாதாந்திர, காலாண்டு மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் முன்னேற்றம் பதிவு செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். எனவே, தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயண திட்டங்களை தயாரித்துஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.