சென்னை: ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊராட்சிகளில் வீடுதோறும் குப்பை சேகரிக்க வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தூய்மைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர் சங்கம், தூய்மைக் காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, தூய்மைக் காவலர்கள் சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு எடுக்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு எடுக்கப்பட்டால் அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.