“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான் கழக கண்மணிகளுக்கு இப்படி கண்டிப்பு மணி அடித்திருக்கிறார்.
‘வெல்வோம் 200… படைப்போம் வரலாறு’ என சூளுரைத்துக் கிளம்பி இருக்கும் திமுக, தேர்தல் ஓட்டப் பந்தயத்தில் மற்ற கட்சிகளைவிட சற்று வேகமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அரசின் திட்டங்களைச் சொல்லி மக்களுக்கு நெருக்கமாகி வரும் அதேவேளையில், தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து முக்கிய அமைச்சர்களை அதன் பொறுப்பாளர்களாக நியமித்தும் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது திமுக தலைமை. மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு சராசரியாக 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களின் தலைக்கும் கத்தி இருக்கிறது என்பதால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மண்டலப் பொறுப்பாளர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்று வருகிறார்கள்.
அந்த வகையில், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் கவனிப்பில் 41 தொகுதிகள் வருகின்றன. இதில் பெருவாரியான தொகுதிகளை வென்றெடுத்து தலைமையிடம் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என துடிக்கும் வேலு, அதற்காக எக்ஸ்ட்ரா டைம் போட்டு வேலை செய்வதாகச் சொல்கிறார்கள்.
அதிலும், மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்பதிலும் கடந்த முறை கைவிட்டுப் போன ஆரணி தொகுதியை இம்முறை கையகப்படுத்த வேண்டும் என்பதிலும் எ.வ.வேலு கருத்தாய் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட திமுக-வுக்குள் அரசல் புரசலாக உட்கட்சி புகைச்சல் இருப்பதை உள்வாங்கிய வேலு, மாவட்ட திமுக-வினரை அண்மையில் ஏலகிரி மலைக்கு அழைத்து எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதி நிர்வாகிகளை ஏலகிரி மலைக்கு அழைத்த எ.வ.வேலு, அவர்களில் குறிப்பிட்ட சிலரை தனித் தனியாக அழைத்தும் பேசி இருக்கிறார். அப்போது, கட்சிக்குள் இருக்கும் உட்பூசல்களையும் எடுத்துச் சொல்லி சம்பந்தப்பட்டவர்களுக்கு சத்தமில்லாமல் குட்டுவைத்திருக்கிறார் வேலு.
இது குறித்து, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “அந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களின் மனக்கசப்புகளையும் அமைச்சரிடம் சொன்னார்கள். அதற்கு அவர், ‘அதையெல்லாம் உங்களுக்குள்ளேயே நீங்கள் தான் பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, கமிஷன் வரல… மரியாத தரல… போஸ்டர்ல என் பேரப் போடல… இவன் கிள்ளிட்டான்… அவன் கொட்டிட்டான்னு ஸ்கூல் பசங்க கணக்கா பேசிக்கிட்டு இருக்கக்கூடாது.
கட்சி தொண்டர்களையும், கிளைச் செயலாளர்களையும் நேரில் அழைத்துப் பேசி அவர்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுக்கணும். எந்த எடத்துல எப்படி வேலை செய்யணும்… என்ன செஞ்சா ஓட்டு வாங்கலாம்னு நீங்களே கலந்து பேசி எனக்கிட்ட சொன்னீங்கன்னா ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.
எம்பி தேர்தலில் எந்த பூத்தில் எல்லாம் கம்மியான வாக்குகள் பதிவானதோ அங்கெல்லாம் இந்த முறை லீடிங் காட்டணும். தலைமை யாருக்கு சீட் கொடுக்கிறதோ அதை ஏத்துக்கிட்டு மத்தவங்க அவங்களுக்கு வேலை பார்க்கணும். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினாலும் ஏத்துக்கிடணும். நமக்கு சீட் கிடைக்கலையேங்கிற ஆதங்கத்துல உள்குத்து வேலை பார்க்காம, கட்சி ஜெயிக்கணும்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரணும்னு நெனச்சு ஒவ்வொருத்தரும் வேலை பார்க்கணும்.
நான் சொன்னதை எல்லாம் கேக்காம விட்டு எந்தத் தொகுதியாச்சும் கைவிட்டுப் போச்சுன்னா, அப்புறம் இங்க இருக்கவங்களுக்கு எல்லாம் ஒன்றியப் பதவியும் இருக்காது, நகரப் பதவியும் இருக்காது. கட்சித் தலைமை கண்டிப்பான நடவடிக்கை எடுத்து எல்லாரையும் ஓரங்கட்டிடும்’னு சொன்னார். அமைச்சர் இப்படி வெளிப்படையா பேசுனதுல சிலருக்கு வருத்தம் தான்.
அதேசமயம். பெருவாரியான நிர்வாகிகளோட மனசுல, கட்சிக்காக வேலை செய்யாதவங்களையும் கட்சிக்கு துரோகம் செய்யுறவங்களையும் தயவு தாட்சண்யம் பார்க்காம ஜெயலலிதா பாணியில் ஓரங்கட்டினால் தான் எல்லாருக்கும் பயம் வரும் என்ற எண்ணம் தான் இப்ப மேலோங்கி நிற்கிறது” என்றனர். உள்குத்து பார்ட்டிகளை அமைச்சர் எ.வ.வேலு சொல்வது போல் உண்மையிலேயே ஓரங்கட்டுமா திமுக தலைமை?