சென்னை: வணிக உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிக உரிம கட்டணங்கள் 2025-26 ஆண்டுக்கு பெருமளவு உயர்த்தப்பட்டது. அதனால் வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எடுத்துச் சென்றது.
அப்போது, 2025-26 ஆண்டுக்கான தொழில், வணிக உரிம கட்டணங்கள் சிறு, குறு வணிகர்களுக்கு அவசியம் குறைக்கப்பட வேண்டும் என்பதை, இப்பேரமைப்பு வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள வணிக கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,500 என்பதை, ஆண்டுக்கு ரூ.1,200 என உரிமக் கட்டணங்களை அரசு குறைத்தது.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கும், தொழில் – வணிக உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தலுக்கான நடைமுறையை அமல்படுத்துவதிலும் கால தாமதம் ஏற்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு, இப்பேரமைப்பு, தொழில், வணிக உரிமங்கள் புதுப்பித்தலுக்கான கால நீட்டிப்பை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதை அரசு பரிசீலித்து தொழில், வணிக உரிமங்கள் புதுப்பித்தலுக்கான காலவரம்பை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும், பேரமைப்பின் கோரிக்கைப்படி, அந்த அரசாணை எளிய வணிகர்களுக்கும் புரியும் வகையில் தமிழில் வெலியிடப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.