சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பெறும் 5 நீதிபதிகளுக்கு நேற்று தலைமை நீதிபதி தலைமையில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது.
சென்னை உயர்மன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஆர்.ஹேமலதா நேற்றுடன் பணிஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வரும் மே 2-ம் தேதியும், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் வரும் மே 9-ம் தேதியும், நீதிபதி வி. பவானி சுப்பராயன் வரும் மே 16-ம் தேதியும், நீதிபதி வி. சிவஞானம் வரும் மே 31-ம் தேதியும் பணி ஓய்வு பெறவுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே மாதம் கோடை விடுமுறை என்பதால் இந்த நீதிபதிகள் 5 பேருக்கும் நேற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் உயர் நீதிமன்ற கலையரங்கில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் 5 நீதிபதிகளின் பணிக்காலம் குறித்து எடுத்துரைத்தார். அதன்பிறகு 5 நீதிபதிகளும் ஏற்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், ஓய்வு பெறும் நீதிபதிகளின் குடும்பத்தாரும், நீதிமன்ற ஊழியர்களும் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 65 பேர் பணியி்ல் உள்ளனர். அதில் நீதிபதி ஹேமலதா நேற்றுடனும், மற்ற 4 நீதிபதிகள் இம்மாதத்திலும் பணி ஓய்வு பெறுவதால் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
( படம் உண்டு: திரு. பிரபு)