திருப்பூர்: உடுமலை அருகே போலீஸ் சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். விசாரணைக்காக சென்ற இடத்தில் தந்தை மகன்கள் சேர்ந்து அவரை கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மகன்கள் மணிகண்டன் (30), தங்கப்பாண்டி (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் இன்று காலை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக சென்ற மணிகண்டன் போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குடிமங்கலம் உதவி ஆய்வாளர் சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸாரை தாக்க முயன்ற மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இதையடுத்து மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் விசாரணைக்குப் பின் இன்று உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.